
இஸ்லாமாபாத், ஆகஸ்ட்-12-மலேசியாவும் பாகிஸ்தானும் இருதரப்புச் சட்ட மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் (ITOP) கையெழுத்திட்டுள்ளன.
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் Syed Mohsin Raza Naqvi-யும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif இந்நிகழ்வை முன்னின்று வழிநடத்தினார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மலேசியக் கைதிகள் தங்களின் எஞ்சிய தண்டனைக் காலத்தை மலேசியாவிலும், மலேசியச் சிறைகளில் உள்ள பாகிஸ்தானிய கைதிகள் தங்களின் தாய்நாட்டிலும் கழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கைதிகள் தங்களின் சொந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் சூழலுக்கு ஏற்ப மறுவாழ்வு திட்டங்களில் பங்கேற்க இது சிறந்த வாய்ப்பை வழங்கும் என அமைச்சர் சைஃபுடின் தெரிவித்தார்.
மலேசியாவின் பல்வேறு அரசுத் துறைகளின் 5 கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இறுதிச் செய்யப்பட்டுள்ளது.



