![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-11-Jun-2024-01-27-PM-5149.jpg)
மும்பை , ஜூன் 11 – சனிக்கிழமையன்று மும்பை சத்ரபதி சிவாஜி (Chhatrapati Shivaji Maharaj) அனைத்துலக விமான நிலையத்தில் இன்டிகோ விமானமும் , ஏர் இந்திய விமானமும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டதை தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு நிலையத்தின் அதிகாரி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இன்டிகோ விமானம் ஓடும் தளத்தில் தரையிறங்கியபோது ஏர் இந்திய விமானம் புறப்பட்டபோது ஏற்படவிருந்த அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த இரு ஜெட் விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்கு ஒரு சில வினாடிகள் மட்டுமே இருந்தன.
அந்த இரு விமானங்களும் 509 மீட்டர் தூரத்தில் மட்டுமே இருந்தன. ஏர் இந்திய விமானம் புறப்பட்ட மூன்று வினாடிகளுக்குப் பிறகு இன்டிகோ விமானம் தரையிறங்கியதாக விமான ராடார் தரவின் தகவல்களில் தெரியவந்தது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து (Indore) வந்த இன்டிகோ 6E5053 விமானம் தரையிறங்கியபோது ஏர்இந்திய AI657 விமானம் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட வேளையில் ஏற்படவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.