![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-10-Jun-2024-10-12-AM-6428.jpg)
புது டெல்லி, ஜூன்-10, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
இந்திய அதிபர் மாளிகையில் விமரிசையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில்
மோடிக்கு, அதிபர் திரௌபதி மும்மு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்தாற்போல் மூன்றாவது முறையாக பிரதமர் ஆனவர் என்ற பெருமையை 73 வயது மோடி பெறுகிறார்.
மோடியுடன் 30 அமைச்சர்களும் 41 இணை அமைச்சர்களும் நேற்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் நிதி அமைச்சராக சக்தி வாய்ந்த பெண்ணாக வலம் வந்தவரான தமிழகத்தின் நிர்மலா சீதாராமன் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
சிறப்பம்சமாக, பிரபல மலையாள நடிகரும் விக்ரமின் ‘ஐ’ படத்தின் வில்லனுமான சுரேஷ் கோபி இணை அமைச்சராகியுள்ளார்.
அவர் BJP சார்பில் கேரளாவில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பாரதீய ஜனதா கட்சி 240 தொகுதிகளைக் கைப்பற்றி, தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.