![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-15-Mar-2024-04-05-PM-7987.jpg)
கோலாலம்பூர், மார்ச்-15 – வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டே மோட்டார் சைக்கிளில் ‘சாகசம்’ புரிந்து வைரலான 3 பெண்களைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
16 முதல் 18 வயதிலான அம்மூவரும் புதன்கிழமை மலாக்காவில் கைதானதாக புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ முஹமட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி தெரிவித்தார்.
அவர்கள் சாகசம் புரிந்த ‘Yamaha Y15ZR’ மோட்டார் சைக்கிள்களையும் விசாரணைக்காகப் போலீஸ் பறிமுதல் செய்தது.
அச்சம்பவத்திற்கு முன், சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள உணவகமொன்றில் இருந்து கொன்வோய் ஊர்வலமாக அவர்கள் சென்றிருக்கின்றனர்.
தங்களுக்குள் சவால் விட்டுக் கொண்டு நெடுஞ்சாலையில் அந்த ஆபத்தான ‘சாகசத்தைப்’ புரிந்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அம்மூவரும் ‘Awek Melaka’ மோட்டார் சைக்கிளோட்டிகள் கிளப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு குற்றங்களுக்காக அம்மூவருக்கும் 7 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் முஹமட் அஸ்லான் சொன்னார்.
மோட்டார் சைக்கிளில் படுத்துக் கொண்டு, இரு கால்களையும் நேராக பின்னால் நீட்டியவாறு சூப்பர் மேன் போல் அவர்கள் பயணம் செய்ய வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் பரவி கண்டனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இது போன்ற நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு போலீஸ் சும்மா இருக்காது என்றும் டத்தோ முஹமட் அஸ்மான் எச்சரித்தார்.
அதே சமயம், சாலை விதிமுறைகளைப் பின்பற்றும் மோட்டார் சைக்கிளோட்டி தலைமுறையை உருவாக்கும் நோக்கில், விழிப்புணர்வு இயக்கங்களும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.