
கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 –வட்டார அளவில் இரண்டாம் இடம், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச அளவில் மூன்றாம் இடம் எனத் தொடர் வெற்றிகளைக் குவித்து, தேசிய வகை சிகாம்பூட் தமிழ்ப்பள்ளியின் வலைப்பந்து அணி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜூலை 22 முதல் 25-ஆம் தேதி வரை MSN செத்தியாவங்சா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற செந்தூல் வட்டார 12 வயதுக்குட்பட்டோருக்கான வலைப்பந்துப் போட்டியில் 36 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டிவரை முன்னேறிய சிகாம்பூட் தமிழ்ப்பள்ளி, கம்போங் பத்து மலாய் பள்ளி அணியிடம் 10–6 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பள்ளியை பிரதுநிதித்து, மொத்தம் 12 மாணவிகள் போட்டியில் கலந்துக் கொண்டனர்.இத்தொடரில் இப்பள்ளியின் சுஸ்மிதா தமிழ்ச்செல்வன் எனும் மாணவி சிறந்த Goal Attack ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவிகள் செந்தூல் வட்டார அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெற்ற MSSWPKL போட்டியில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் செந்தூல் வட்டார அணி மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியது.
மேலும், பள்ளி மாணவி சுஸ்மிதா கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 3 வரை மலாக்காவில் நடைபெறும் தேசிய அளவிலான MSSM போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
பயிற்றுநர் புனிதா பாலன், அணி மேலாளர் தேவிகா செல்வராஜ் மற்றும் ஆசிரியைகள் திலகா ஷாமளா, சகுந்தலா ஆகியோரின் வழிகாட்டுதலில் அணி பயிற்சி பெற்று வருகிறது.
இவர்களோடு Blues Brothers Welfare & Association Malaysia அமைப்பின் இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் எம். சங்கர் பல வகையில் அணிக்கு ஆதரவளித்து வருகிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் சிகாம்பூட் தமிழ்ப்பள்ளி மாணவிகள் கோலாலம்பூர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு MSSM தேசியப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.



