கோலாலம்பூர், நவ 25 – கடந்த சில தினங்களாக நாட்டில் வைரலாகியுள்ள தங்கும் விடுதியில் மாணவன் ஒருவன் சக மாணவர்களால் குச்சியில் தாக்கப்பட்டு பகடி வதை செய்யப்படும் காணொளி, மலேசியாவில் நிகழ்ந்த சம்பவமல்ல, மாறாக சீனாவில் நடந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளார் நாட்டின் போலிஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன்.
கடந்த நவம்பர் 22ஆம் திகதி முதல் அக்காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அதில் தங்கும் விடுதி என நம்பப்படும் இடத்தில், சக மாணவர்கள் ஒரு மாணவரைத் தாக்க, அவர் வலியால் கதறும் காட்சி அக்காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலிசார் மேற்கொண்ட விசாரணையில், அது சீனாவில் நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் இணையத்தில் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் அதன் உண்மைத் தன்மை அறியாமல் பகிர வேண்டாம் என ரசாருடின் எச்சரித்துள்ளார்.