லூமூட், ஏப்ரல்-23, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அரச மலேசியக் கடற்படை (TLDM) தினத்தின் 90-ஆம் ஆண்டு விழா ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பேராக், லூமூட்டில் உள்ள TLDM தளத்தில் இன்று காலை இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகி, அவற்றில் இருந்த 10 பேரும் உயிரிழந்ததை அடுத்து, அவ்விழா ரத்தாகியுள்ளது.
தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் அதனை உறுதிப்படுத்தினார்.
அவ்விழா கொண்டாங்கள் ரத்துச் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக சிறப்புத் தொழுகை நடைபெறும் என்றார் அவர்.
அம்முடிவுக்கு, TLDM-மின் உச்சத் தலைவரும் சிலாங்கூர் சுல்தானுமாகிய சுல்தான் ஷாராஃபுடின் ஒப்புதல் அளித்திருப்பதாக, காலிட் நோர்டின் கூறினார்.
இவ்வேளையில், மே 3 முதல் 5 வரை நடைபெறவிருந்த TLDM Armada பொது நாள் கொண்டாட்டங்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக லூமூட் TLDM தளத்தில் நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.