
ஜோர்ஜ் டவுன், ஜூன்-22-பொதுமக்கள் அணிந்திருக்கும் உடை, இனம் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் அதனை பார்க்காமல் அவர்களிடமிருந்து புகார்களை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ டெனிஸ் லிம் குவாங் கெங் ( Dennis Lim Kwang Keng) உத்தரவிட்டுள்ளார்.
உதவி கோரி வரும் எவரையும், குறிப்பாக அவசரநிலை, விபத்து, குற்றவியல் அச்சுறுத்தல் அல்லது உயிருக்கு ஆபத்தான சூழலை எதிர்கொள்பவர்களை போலீஸ் துறையினர் திருப்பி அனுப்பக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தால், போலீஸ் அதிகாரிகள் அவர்களின் புகாரை பதிவு செய்ய வேண்டும் .
“உடை அல்லது இன அடையாளம் காரணமாக மக்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அனைத்து போலீஸ் தலைவர்களும் தங்கள் அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும். புகார் செய்ய வருபவர்கள் அவசரமான சூழ்நிலையில் இருக்கலாம் என்பதால் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது” என பினாங்கு மாநில போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஊடகவியலாளர்களுடனான தனது முதல் சந்திப்பில் Dennis Lim தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பு என்பது போலீஸ்துறை , உள்ளூர் சமூகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு கூட்டுப் பொறுப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிலேயே சிறந்த பாதுகாப்புச் சாதனைகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் பினாங்கின் நிலைக்கு, அம்மாநில மக்களே முக்கியக் காரணம் என்றும் அவர் பாராட்டினார்.



