
கோலாலம்பூர், ஜூலை-8 – நேற்று பங்சாரில் உள்ள Abdullah Hukum LRT நிலையத்தில் இரயில் ஒன்றில் புகை வெளியேறியதற்கு பிரேக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என RapidKL நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த கிளானா ஜெயா வழித்தடத்தில் காலை 9.44 மணிக்கு ஏற்பட்ட சம்பவத்தில், அந்த இரயிலின் பிரேக் அமைப்பில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, அந்தப் பெட்டியில் இருந்து புகை வெளியேறியது.
இது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் அனைவரும் உடனடியாக இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட இரயில் உடனடியாக சேவையிலிருந்து நீக்கப்பட்டு, கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு பயணிகள் அடுத்த இரயிலில் பயணத்தைத் தொடர்ந்ததாக RapidKL தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட இரயிலில் தீவிர தொழில்நுட்பப் பரிசோதனை மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புத் தரம் முழுமையாகப் பூர்த்திச் செய்யப்பட்ட பின்னரே, அந்த இரயில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்படும் என RapidKL உறுதியளித்துள்ளது.



