கோலாலம்பூர், ஜன 6 – அரசாங்கத்தை கவிழ்க்கும் துபாய் சதித்திட்டத்தின் மூலம் 120 பேரிடம் எழுத்துப்பூர்வமான சத்தியபிரமான பிரகடனத்தை எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளதாக சர்ச்சைக்குரிய பதிவேட்டாளர் ராஜா பெட்ரா கமருதீன் கூறிக்கொண்டதை அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான லோக்மன் ஆடம் நிராகரித்தார். நாடு கடந்து பிரிட்டனில் அடைக்கலமாகியிருக்கும் பெரிக்காத்தான் நேசனல் ஆதரவில் அந்த பதிவேட்டாளர் கூறியிருக்கும் தகவல் ஒரு குப்பை என்பதோடு அதில் பல குளறுபடிகள் இருப்பதே இதற்கான காரணம் என லோக்மன் தெரிவித்தார்.
துபாய் சதித்திட்டத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அம்னோவின் துணைத்தலைவரான முகமட் ஹசான் என ஜனவரி 5ஆம் தேதி ராஜா பெட்ரா கூறிக்கொண்டார். மறுநாள் ஜனவரி 6ஆம் தேதியன்று பிரதமர் பதவிக்கு மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டதாகவும் அவர்களில் முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன், திரங்கானு மந்திரிபெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் மற்றும் முஹிடின் யாசின் ஆகியோர் என ராஜா பெட்ரா கூறியிருந்தார். ராஜா பெட்ராவே அந்த அறிக்கையில் பொய்யான கதையை தெரிவித்திருக்கிறார் என லோக்மன் ஆடம் சுட்டிக்காட்டினார்.
சரவாக் ஜி.பி.எஸ்-சில் உள்ள 23 எம்.பிக்கள் பலமுறை அன்வாரின் மடானி அரசாங்கத்தை நிராகரித்துள்ளதாக ராஜா பெட்ரா தவறாக கணித்துள்ளார். அதோடு சபா அரசியலின் உண்மையான நிலைமையை கருத்திற்கொள்ளாமலும் ராஜா பெட்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார் என லோக்மன் கூறினார். கபுங்கன் ரக்யாட் சபாவும் ஷஃபி அப்டல் தலைமையிலான வாரிசனும் ஒன்றினைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லையென்பதோடு அவை பெரிக்காத்தான் நேசனலுக்கு ஆதரவாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தகவலையும் லோக்மன் ஆடம் சுட்டிக்காட்டினார்.