கோலாலம்பூர், ஏப்ரல் 20 – பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்கு வரும் தொழிலாளர் தினத்தன்று நற்செய்தி காத்திருப்பதாக பிரதமர் கோடி காட்டியுள்ளார்.
நிகரச் சம்பளத்தை உயர்த்துவது உள்ளிட்ட ஊதிய மறுசீரமைப்புப் பரிந்துரைகள் தொழிலாளர் தின பேரணியில் அறிவிக்கப்படும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
SSPA எனப்படும் பொதுச் சேவை ஊதிய முறையின் மறு ஆய்வு செயற்குழு
வெள்ளிக்கிழமை நடத்தியக் கூட்டத்தில் அது ஏறக்குறைய இறுதிச் செய்யப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
அப்பரிந்துரை அறிக்கை, அடுத்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டியிருப்பதாக, நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த உத்தேச ஊதிய உயர்வானது, அரசு ஊழியர்கள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோர் தங்களது வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க பெரிதும் உதவும்.
அதோடு, தங்களது உற்பத்தி ஆற்றலைப் பெருக்கி மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கவும் அவர்களை ஊக்குவிக்கும் என பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதால் அரசு ஊழியர்களின் நலன் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.