பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 24 – ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, மங்கோலிய மாடல் அழகி அல்தான்தூயா ஷாரிபு கொலை தொடர்பில் வாயை திறக்காமல் இருக்க, பெயர் குறிப்பிடப்படாத மூலங்கள் வாயிலாக தாம் பத்து லட்சம் ரிங்கிட்டை பெற்றதாக, சிருல் அசார் உமர் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியில் தொடர்புடைய முக்கிய வழக்கறிஞர் ஒருவரும், அமைச்சரவையின் உயர்மட்ட தலைவர் ஒருவரும் தமக்கு அந்த பணம் தந்ததாக அவர் சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை, அல்-ஜசீரா நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது சிருல் அதனை தெரிவித்துள்ளார்.
அல்தான்தூயாவை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தமக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை எனவும், அரசியல் விளையாட்டில் தாம் பலிகடாவாக ஆக்கப்பட்டதாகவும், முன்னாள் போலீஸ் அதிகாரியும், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப்பின் மெய்காவலருமான சிருல் கூறியுள்ளார்.
“அல்தான்தூயாவை உண்மையில் யார் கொலை செய்ய உத்தரவிட்டது என்பதை அறிய, எனது நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஆனால், என்னால் அது யார் என்பதை வெளிப்படுத்த முடியாது” என சிருல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அல்தான்தூயாவை கொல்லும் உத்தரவை,
நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதி ஒருவர் பிறப்பித்ததாக அவர் சொன்னார். ஆஸ்திரேலிய தடுப்புக் காவலில் இருந்து இம்மாதம் எட்டாம் தேதி, சிருல் விடுவிக்கப்பட்டார்.
எனினும், மலேசியாவிற்கு திரும்புவது தமக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், தமது மகனுடன் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே வசிக்கப் போவதாகவும் சிருல் தெரிவித்தார். இவ்வேளையில், அல்தான்தூயா குடும்பத்தாரிடமும் சிருல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.