சென்னை, டிச 6 – தமிழ் நாடு திருச்சியில் நடைபெற்ற ஆசியாவின் சிறந்த சைவ சமையல் நிபுணர் விருதை மலேசியாவின் பிரபல சமையல் கலைஞரான காளிதேவன் முருகையா எனப்படும் டேவ் (Chef Dave) பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற அந்த விருந்தளிப்பு விழாவில் ஆசியாவின் சிறந்த சமையல் நிபுணர் விருது கிடைக்கப்பெற்றது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக டேவ் தெரிவித்தார்.
எனது முன்னோர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த விருதைப் பெறுவது எனக்கு உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. எனது இன்றைய வெற்றிக்கு வழி வகுத்த அவர்களின் துணிச்சலுக்கும் கடின உழைப்புக்கும் இந்த சாதனையை அர்ப்பணிக்கிறேன் என தமது முகநூலில் டேவ் குறிப்பிட்டுள்ளார்.
“என்னை வெற்றியாளர் என்று மக்கள் விவரிக்கும் போது, நான் அடக்கத்தோடு அதைனை ஏற்றுக்கொள்கிறேன். நான் கடினமாக உழைத்து நல்ல கொள்கைகளையும் பண்புகளையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடுவேன் என்பதோடு அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என டேவ் தெரிவித்தார். ஜொகூர் ஜெமெந்தாவைச் சேர்ந்த டேவ், 2019 ஆம் ஆண்டில் ஒரே இரவில் சைவ உணவு உண்பவராக மாறினார். முட்டை மற்றும் பால் தொழில்களில் ஏற்படும் கொடுமையைப் பற்றிய இரண்டு வீடியோக்களைப் பார்த்த பிறகு இது தொடங்கியது, இது அவரை மிகவும் உணர்ச்சிவசப்படச் செய்தது. 2020 ஆம் ஆண்டுக்கு சில வாரங்களுக்கு முன்பு, நான் சைவ உணவு உண்பதற்கும், விலங்குகளுடன் ஒற்றுமையாக இருப்பதற்கும், விலங்குகளுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக போராடுவதற்கும், குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் ஒரு முடிவை எடுத்தேன் என்று அவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.