![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-30-Dec-2023-12-05-PM-7250.jpg)
கோலாலம்பூர், டிச 30 – ஆசிரியர்கள் மத்தியில் விவகாரத்து எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அதற்கு வேலையிட மாற்றம் கிடைக்காதது ஒரு காரணமாக முன் வைக்கப்படுகிறது.
‘e-Gtukar Pertukaran Guru – Oh e-Gtukar!’ எனும் முகநூல் கணக்கில் பல ஆசிரியர்கள் தங்களின் கசப்பான அனுபவங்களை பதிவிட்டிருக்கும் நிலையில், அதில் புதிதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் வேலையிட மாற்றம் கிடைக்காததால் தனக்கு விவாகரத்து ஏற்பட்டதையும் தன்னுடைய அந்தரங்க வழக்கை பாதிக்கப்பட்டதையும் பதிவிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் வேலையிட மாற்றலுக்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியும் ஒவ்வொரு முறையும் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
திருமணமான இதர ஆசிரியர்கள் அல்லது திருமணமாகாத ஆசிரியர்களுக்கும் வேலையிட மாற்றம் கிடைத்திருக்கும் நிலையில், தனக்கு கிடைக்காததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கில் இன்னும் பல ஆசிரியர்கள் வேலையிட மாற்றம் கிடைக்காததால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையிம் அங்கே பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்துரைத்துள்ள NUTP எனப்படும் தேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் அமினுதீன் அவாங், வேலையிட மாற்றத்தினால் ஆசிரியர்கள் விவாகரத்து பெறுவது மிக குறைவான எண்ணிக்கையே. சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆசிரியர்களுக்கான தேவை, ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ள பாடத்தின் தேர்வு போன்ற பல கூறுகளை வேலையிட மாற்றலுக்கான விண்ணப்பத்தில் கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுருக்கிறார்.
இந்த விண்ணப்பங்களை விரைந்து சரிபார்க்கவும் தமது தரப்பு கல்வி அமைச்சை வலியுறுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதே சமயத்தில், இதற்கு முன்பு வேலையிட மாற்றலுக்கு வருடத்திற்கு இரு முறை மட்டுமே விண்ணப்ப செய்ய முடியும் என்று இருந்த நிலையில் கடந்தாண்டு தொடங்கி அது 4 முறையாக மாற்றப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக மேல் விவரங்களை பெற வணக்கம் மலேசியா கல்வி அமைச்சை தொடர்புக் கொள்ள முயற்சித்து வருகிறது.