கோலாலம்பூர், நவ 23 – மேலும் அதிகமான சீனர்களும் இந்தியர்களும் ஆயுதப் படையில் இணைவதை ஊக்குவிக்க சிறப்பு பணிக்குழுவை அமைக்கும்படி பக்காத்தான் ஹரப்பான் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் கேட்டுக்கொண்டுள்ளார். மலேசியர்கள் பொதுவாகவே தேசப்பற்று உள்ளவர்கள். ஆனால் இந்தியர்களும் சீனர்களும் ஆயுதப்படையில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கப்படுவதில்லையென அவர் கூறினார். 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட பதிலில் ஆயுதப் படையில் சீனர்கள் 0.3 விழுக்காடும், இந்தியர்கள் 0.9 விழுக்காடும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மலேசியர்களின் மக்கள் தொகையில் குறிப்பாக சீன மற்றும் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக ராணுவத்தில் இணைவதை ஊக்குவிப்பதற்கு சிறப்பு பணிக்குழு ஒன்றை தற்காப்பு அமைச்சர் மற்றும் அரசாங்கம் அமைக்க வேண்டும் என ராயர் கேட்டுக்கொண்டார்.