
புத்ரா ஜெயா, ஜூலை 2 – கோலா கங்சார், வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையில் 253ஆவது கிலோமீட்டரில் உரம் ஏற்றிச் சென்ற 5 டன் லோரியின் பின்னால் பிக்அப் ( Pik ap ) வாகனம் மோதியதில் அதில் இருந்த இருவர் மரணம் அடைந்தனர். இந்த துயரச் சம்பவம் இன்று விடியற்காலை மணி 5.51 அளவில் நிகழ்ந்தது.
மிகவும் மோசமாக நொறுங்கிய நிலையில் காணப்பட்ட பிக்அப் வாகனத்தில் அதன் ஓட்டுநரும் அருகே அமர்ந்திருந்த பயணியும் சிக்கி இறந்துகிடந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குனர் சபரோட்ஷி நோர் அகமட் ( Sabarodzi Nor Ahmad ) தெரிவித்தார். 25 வயதுடை பிக்அப் ஓட்டுநரும், 22 வயதுடைய பயணியும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டதை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.