பெட்டாலிங் ஜெயா, நவ 26 – இந்திய வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடனுதவி திட்டங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் அவற்றை தளர்வுபடுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமென கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சபை கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் நிவாஸ் ராகவன் வலியுறுத்தினார்.
அரசாங்க மான்யங்கள் நாடு முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த இந்திய வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்ப்பதை கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை நடவடிக்கையை முன்னெடுக்கவிருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் விளக்கக் கூட்டங்களும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.
அண்மையில் வரவு செலவு திட்டத்தில் 40 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வர்த்தகர்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை அனைத்து இந்திய வர்த்தகர்களுக்கும் கொண்டுச் செல்ல வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் நாங்கள் கொண்டுள்ளோம் என அவர் கூறினார்.
வர்த்தக துறையில் வளர்ந்து வரும் அல்லது தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் வர்த்தகர்கள் கடனுதவிக்கான கடுமையான விதிமுறையினால் பல்வேறு சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கு உள்ளாகியிருப்பதையும் நிவாஸ் ராகவன் சுட்டிக்காட்டினார். இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டியது, அல்லது எளிமைப்படுத்துவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாதவரை வர்த்தகர்கள் இந்த கடன் திட்டங்களால் பயன் அடைய முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். அரசாங்கம் பல்வேறு நிதித் திட்டங்களை இந்தியர்களின் மேம்பாட்டிற்காக அறிவித்துள்ளது. இந்த நிதித் திட்டங்களை இந்திய சமூதாயம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று பரவலான குறைகூறல்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
ஆனால், அரசாங்க தரப்பிலிருந்து பல விவகாரங்கள் அரசாங்க தரப்பிலிருந்து இந்திய வர்த்தகர்களுக்கு சென்றடைவதில்லை. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல்களை அரசாங்க அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் நடத்துவதற்கும் கோலாலம்பூர் – சிலாங்கூர் வர்த்தக சபை திட்டமிட்டுள்ளதாக நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.