
சிரம்பான், ஜூன்-19 – அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற அனைத்துலக கண்டுப்பிடிப்பு, புத்தாக்கப் போட்டி, மற்றும் அனைத்துலக உலகக் கிண்ண போட்டியில் கலந்துகொண்ட நெகிரி செம்பிலான் ,தேசிய வகை ரந்தாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.
மலேசியா , இந்தோனேசியா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியில் மொத்தம் 233 குழுக்கள் பங்கேற்றன.
மலேசிய கண்டுப்பிடிப்பு மற்றும் படைப்பாளிகள் சங்கம் , இந்தோனேசிய இளம் அறிவியலாளர்கள் சங்கம் ஆகியவவை இந்தோனேசியாவின் UNJ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய இப்போட்டியில் ரந்தாவ் தமிப் பள்ளியைச் சேர்ந்த தினேஷ் கோபி, தேஸ்வின் ராஜ் அருண்முகன், சஷ்வின் ஹேமநாதன், டுவாரகேஸ் ஸ்ரீதரன், யாழ்நிலவன் நகுலன்.
யாழினி நகுலன் ஆகிய ஆறு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பயிர்கள் நீரின்றியும் உரங்கள் கிடைக்காமல் வாடுவதைத் தவிர்க்க சூரிய ஆற்றல்
தகடு, தகவல்களைக் காட்டும் திரை (LCD display), ஆகியவற்றை இயக்கும் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முதன்மை பலகை( Arduino) மழைநீரைச் சேமித்து,மண்ணின் ஈரப்பத உணரி ( soil moisture censor) வழியாக தானியங்கி முறையில் அறிந்து பயிர்களுக்குத் தேவையான நீரையும் திரவ உரங்களையும் துல்லியமாக வழங்கும் விவசாயத்திற்கு ஏற்ற நீர் பாசன முறையை உருவாக்கிய புத்தாக்க கண்டுப்பிடிப்பின் மூலம் மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
இதன்வழி ரந்தாவ் தமிழ்ப் பள்ளியின் 101 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக போட்டியில் கலந்துகொண்டு பள்ளிக்கும் பெற்றோர்க்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த போட்டிக்காக மாணவர்களுக்கு போதிய பயிற்சியை கொடுத்த அறிவியல் பணித்திய தலைவி திருமதி வெண்மதி இராமகிருஷ்ணன், பள்ளித் தலைமையாசிரியை திருமதி மகேஸ்வரி கேசவன், அறிவியல் ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி பெரியசாமி , மற்றும் உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஹேமநாதன் செல்வராஜ் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.



