
இந்தோனேசியா, மே-11-இந்தோனேசியாவிலுள்ள டுகோனோ எரிமலை (Gunung Dukono) வெடிப்பில் உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு சிங்கப்பூர் குடிமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில், ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்தோனேசிய மீட்புக் குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, எரிமலை வெடிப்பில் உயிரிழந்த மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதில் இருவர் சிங்கப்பூர் குடிமக்களும், ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவரும் ஆவர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதனிடையே, டுகோனோ எரிமலையைச் சுற்றியுள்ள நான்கு கிலோமீட்டர் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



