
ஜெனிவா, மே 21 -நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புண்டிபுக்யோ எபோலா ( Bundibugyo Ebola)
நோய்ப் பரவலுக்கு தடுப்பூசி உருவாக்குவதற்கு ஒன்பது மாதங்கள் வரை ஆகலாம் என WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 600 சந்தேகத்திற்கிடமான நோயாளிகளும் 139 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும், வைரஸைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்தார்.
இரண்டு சோதனைத் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் அவை இன்னும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை.
இந்த நோய்ப் பரவலின் மையமாக விளங்கும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் இடுரி (Ituri) மாநிலத்தில் 51 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் உகாண்டாவில் இரண்டு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து பயணம் செய்த ஒருவர் உயிரிழந்ததும் அடங்கும்.
உலக சுகாதார நிறுவனம் இதற்கு முன்னர் அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அறிவித்திருந்தாலும் இன்னும் பெருந்தொற்று நிலையை எட்டவில்லை என்று வலியுறுத்தியுள்ளது.
Bundibugyo வகை Ebola பரவல் அரிதானது, மேலும் இதுவரை குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் அங்கீகரிக்கப்பவில்லை என்பதால் , மற்ற வகைகளைக் காட்டிலும் இதன் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.



