கோலாலம்பூர், டிச 6 – இப்போதைய அமைச்சரவை அமைக்கப்பட்டு ஒர் ஆண்டு காலம் மட்டுமே நிறைவடைந்துள்ளதால் அதற்குள் அமைச்சரவையை மாற்றுவது மிகவும் விரைவான காலக்கட்டமாக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
தாம் உட்பட அமைச்சர்கள் மேம்படுத்திக் கொள்வதற்கும் தங்களது திறனை அதிகரிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்பிறகு ஒர் அமைச்சர் நியமிப்பது உட்பட தேவைப்பட்டால் சிறிய மாற்றங்களை செய்யலாம் என மடானி அரசாங்கத்தின் முதல் ஆண்டை முன்னிட்டு டிவி மூன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்க்காணலில் அன்வார் தெரிவித்தார்.
தற்போதையை அமைச்சரவை குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்தாலும் அது இன்னும் முன்னேற்றம் காண வேண்டியிருப்பதாக அவர் கூறினார். அமைச்சர்களுக்கு அவர்களின் பலவீனங்களை களைவதற்கு, ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் குறையும் சூழ்நிலை உருவானால் மட்டுமே அமைச்சரவை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தற்போதைய அமைச்சரவை குழு சிறப்பாக இருக்கிறது. ஆனால், இன்னும் முன்னேற்றம் காண்பதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். வெவ்வேறு கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருப்பதால் சில விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு பரிசீலிக்க வேண்டியிருப்பதாக அன்வார் கூறினார்.