தெலுக் இந்தான், ஜன 22 – இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீட்டை 6 மில்லியன் ரிங்கிட்டாக மாநில அரசாங்கம் அதிகரித்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் ( Woo Kah Leong ) தெரிவித்தார். இது தவிர 2023ஆம் ஆண்டு முதல் தெலுக் இந்தான் (Teluk Intan) நாடாளுமன்ற தொகுதியிலுள்ள அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் தாமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கும் (Nga Kor Ming) வருகை புரிந்ததோடு மொத்தம் 2 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய சமூக விவகாரங்களுக்கான ஒதுக்கீடு 2 மில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த ஒதுக்கீடு 5 மில்லியனாக அதிகரிக்கப்பட்டு இந்த ஆண்டு 6 மில்லியன் ரிங்கிட்டாக உயர்தப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சமயம் உட்பட இந்திய சமூகத்தின் சுபிட்சத்திற்கு பேரா அரசு முன்னுரிமை வழங்குகிறது என்பதற்கு இதுவே சரியான ஆதாரம் என தெலுக் இந்தான் இந்து சங்கத்தின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் Nga Kor Ming-குடன் கலந்துகொண்டபோது Woo Kah leong தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் ஹராப்பானின் (Pakatan Harapan) சீரமைப்புக்கு இந்திய சமூகம் வழங்கிவரும் ஆதரவுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்திய சமூகத்தின் நலன்களில் மாநில அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் 2023ஆம் ஆண்டு முதல் Nga Kor ming மற்றும் Woo Kah Leong ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் வருகை புரிந்துள்ளதோடு இதுவரை 2 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளனர்.