
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 – தாபூங் ஹாஜி (TH) முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசீஸ் அப்துல் ரஹீம் (Abdul Azeez Abdul Rahim), அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையெனில் தம்மை மீண்டும் விசாரிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அரசியல் ஆதாயத்திற்காக பண மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
2022ஆம் ஆண்டு இறுதியில் தயாரிக்கப்பட்ட RCI அறிக்கை, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகவே தற்போது வெளியிடப்பட்டிருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், போலீசார் விசாரணைக் கோப்பை முடித்துவிட்டு, மேலும் நடவடிக்கை இல்லை (NFA) என்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக தமக்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.
2014 முதல் 2020 வரையிலான தாபூங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் சொத்து மேலாண்மையை விசாரிக்க 2021ஆம் ஆண்டு RCI அமைக்கப்பட்டது. தாபூங் ஹாஜி தலைவராக இருந்தபோது எந்த முதலீட்டையும் தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை; அனைத்து முடிவுகளும் முதலீட்டு குழு, இடர் மேலாண்மை பிரிவு மற்றும் இயக்குநர் வாரியத்தின் ஒப்புதலுடன் மட்டுமே எடுக்கப்பட்டதாக அசீஸ் விளக்கமளித்தார்.



