
வாஷிங்டன், ஏப்ரல்-21-ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை அந்நாட்டின் மீதான கடற்படை முற்றுகை நீக்கப்படாது என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“ஒப்பந்தம் ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என அவர் சொன்னார்.
தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், தற்போதைய முற்றுகை ஈரானைப் பொருளாதார ரீதியாக நிலைகுலையச் செய்துள்ளதாகக் கூறிக் கொண்டார்.
இதனால், ஈரான் நாள் ஒன்றுக்கு சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
ஆனால், முற்றுகை நீக்கப்படாத வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்பது இல்லை என ஈரான் தரப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், Hormuz நீரிணையில் முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படை சுட்டுப் பிடித்துள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.



