
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-தென்கிழக்காசியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், எரிபொருள் பங்கீட்டு முறையை அமுல்படுத்தாத ஒரே நாடாக மலேசியா திகழ்வதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்டை நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 10 ரிங்கிட் வரை விற்கப்படும் வேளையில், மலேசியாவில் RON95 பெட்ரோல் இன்னும் 1 ரிங்கிட் 99 சென்னுக்கு வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, சில ஆசியான் நாடுகளில் சுமார் 400 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அன்வார் சொன்னார்.
மத்தியக் கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் உடனான நற்புறவு காரணமாக Hormuz நீரிணை வழியாக மலேசிய எண்ணெய்க் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதே இந்த நிலைத்தன்மைக்கு முக்கியக் காரணம் என அவர் விளக்கினார்.
என்றாலும், நாட்டின் மலிவான எரிபொருள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
பொது மக்களும், சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.



