பாச்சோக், பிப்ரவரி 1 – கிளந்தான், பாச்சோக்கிலுள்ள, பெங்காலான் பெத்தா படகுத் துறையில், போலீசாரிடமிருந்து தப்ப, ஆற்றில் குதித்த ஆடவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பந்தப்பட்ட ஆடவன் போதைப் பொருள் குற்றச்செயல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஆவான்.
நேற்றிரவு மணி ஏழு வாக்கில், பெங்காலான் பெத்தா படகுத் துறையிலிருந்து சுமார் பத்து நீட்டர் தூரத்தில் இருந்து, அந்த 39 வயது ஆடவனிம் சடலம் மீட்கப்பட்டது.
நேற்று மாலை மணி 4.36 வாக்கில், போதைப் பொருள் தொடர்பான சோதனையின் போது, அவ்வாடவன் தப்பிச் சென்றதாக போலீசுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை, பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் இஸ்மாயில் ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.
மீனவப் படகிலிருந்து ஆற்றில் குதித்த அவ்வாடவன், கரைக்கு நீந்திச் செல்ல முற்பட்ட போது மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவனை தேடும் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்ட வேளை ; அது பலனின்றி, இரவு மணி ஏழு வாக்கில் அவனது சடலம் மீட்கப்பட்டது.
அவ்வாடவனுக்கு எதிராக ஆறு பழைய போதைப் பொருள் குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வேளையில், போதைப் பொருள் குற்றவாளிகளை கைதுச் செய்ய ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையின் வாயிலாக, இதர நால்வர் கைதுச் செய்யப்பட்டனர்.