புதுடெல்லி, பிப்ரவரி-19படங்களில் வரும் துணிகர காட்சி போல், ஓடிக் கொண்டிருக்கும் லாரியில் இரு ‘வெங்காயத் திருடர்கள்’ லாவகமாக ஏறி தங்களின் கைவரிசையைக் காட்டும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
அந்த ‘துணிகர’ கொள்ளைச் சம்பவம் இந்தியா புதுடெல்லியில் நிகழ்ந்திருக்கலாம் என NDTV தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
சிறிய ரக சரக்கு லாரியை அத்திருடர்களின் இரு நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களில் பின் தொடருவதும், தத்ரூபமாக படத்தில் வரும் சாகச காட்சிகள் போலவே உள்ளது.
லாரியில் தொங்கியபடியே இரு திருடர்களும் மூட்டைகளில் எதையோ வாரி வாரி நிரப்புகிறார்கள். அது பார்ப்பதற்கு வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போல் தெரிகிறது.
லாரியின் வேகம் குறைந்து, அது ஒரு பாலத்தை நெருங்கும் சமயம் பார்த்து அவர்களில் ஒருவன் சாலையில் குதித்து இறங்குகிறான். மற்றொருவன் தொடர்ந்து வெங்காயத்தை அள்ளுவதில் மும்முரம் காட்ட, மோட்டார் சைக்கிள்களில் நண்பர்கள் பின் தொடருகின்றனர்.
ஏதோ படங்களில் வரும் சாலை துணிகர காட்சிகளைப் போலவே இந்த வெங்காயத் திருடர்களின் செயல் இருப்பதாக வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ஓடும் லாரியில் வெங்காயத்தையும் உருளைக் கிழங்கையும் திருடிய கும்பல் போலீசிடம் சிக்கியதா அல்லது அடுத்த லாரியை குறி வைத்து கிளம்பியதா எனத் தெரியவில்லை.