
மலாக்கா , செப்டம்பர் 4 – மலாக்கா பந்தாய் கிளெபாங் (Pantai Klebang) கடலோரப் பகுதியில் நண்டு பிடிக்கச் சென்றபோது காணாமல் போன 16 வயது மாணவர், நேற்று மாலை புலாவ் உப்பே (Pulau Upeh) அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
மாலை 7.20 மணியளவில், கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் மீனவர்கள் அவரது உடலைக் கண்டுபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் உடலைக் கரைக்கு கொண்டு வந்தனர். இரவு 8.30 மணியளவில் குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டனர்.
முன்னதாக, புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நண்பர் ஒருவருடன் நண்டு பிடிக்கச் சென்ற அம்மாணவர், கடலுக்குள் நீந்தியபோது பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஆழமான பகுதியில் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல் மலாக்கா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதுடன், இன்று பிரேதப் பரிசோதனை நடைபெறுமென போலீசார் தெரிவித்தனர்.



