
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – கடந்த ஜூலை 29ஆம் தேதி இந்தோனேசியா சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய துணை விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பில், ஆறு மலேசிய ஆடவர்களை புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும், 39 வயதுடைய துணை விமானியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவொன்று கடந்த ஆகஸ்ட் 11 முதல் 15ஆம் தேதி வரை ஜகார்த்தாவுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது.
புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறுகையில், கைது செய்யப்பட்ட அனைவரும் குறித்த துணை விமானிக்கு போதைப்பொருட்களை வழங்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் அனைவரும் துணை விமானி தொடர்புடைய போதைப்பொருள் விநியோகக் கும்பலில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை உறுப்பினர்களாகச் செயல்பட்டது தெரியவந்தது. அனைவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் அனைவரும் துணை விமானி தொடர்புடைய போதைப்பொருள் விநியோகக் கும்பலில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை உறுப்பினர்களாகச் செயல்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சந்தேக நபர்கள் அனைவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்ற அந்த துணை விமானிக்கு 50,000 ரிங்கிட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அவற்றை ஹோட்டல் ஒன்றில் மற்றொரு நபரிடம் ஒப்படைக்க அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



