ஜோகூர் பாரு, மார்ச் 24 – ஜோகூர் பாரு நகரிலுள்ள சாலை ஒன்றில் வன்செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். நேற்று முன் தினம் இரவு மணி 8.43 அளவில் சமூக வலைத்தளமான முகநூலில் இது தொடர்பான காணொளி ஒன்று வைரலானது குறித்து புகாரை பெற்றதாக தென் ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Raub Selamat தெரிவித்தார். மாலை மணி 6,30 அளவில் நடந்த அந்த சம்பவத்தில் தலைக்கவசம் அணிந்த அடையாளம் தெரியாத நான்கு உள்நாட்டு ஆடவர்கள் 31 வயதுடைய உள்நாட்டு ஆடவரை தாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மணி 12.35 அளவில் ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து இரண்டு தலைக் கவசங்கள், முன்று டீ சட்டைகள் மற்றும் ஒரு மேலங்கியையும் பறிமுதல் செய்தனர். அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் 19 முதல் 31 வயதுடையவர்களாவர். அவர்களில் இருவர் தங்களது வலது கண் ஓரத்தில் காயம் மற்றும் வீக்கத்திற்கு உள்ளாகியிருந்ததனர். இந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய மற்றொரு நபரை போலீசார் இன்னமும் தேடி வருவதாக Raub தெரிவித்தார்.