தெலுக் இந்தான், ஏப்ரல் 23 – சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவைத் தரிசித்து, இன்று நாட்டின் பல இடங்களில் சித்திர பெளர்ணமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான பேராக், தெலுக் இந்தான், நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திலும் இவ்விழா களைக்கட்டியுள்ளது.
இன்று அதிகாலை தொடங்கி பக்தர்கள் பால்குடங்களை ஏந்துதல், ஆற்றங்கரையிலிருந்து காவடிகளை ஒன்றன் பின் ஒன்றாக உருமி மேளத்துடன் எடுத்தல், முடிக் காணிக்கை செலுத்துதல், தொட்டில் கட்டுதல் என பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய 2,000 பக்தர்களுக்கு மேல் ஆலயத்தை நோக்கி அலையென திரண்டுள்ளனர்.
இதனிடையே, இன்று மாலை ஆறு மணிக்கான பூஜைக்குப் பின்னர் இரவு எட்டு மணிக்கு முருகப் பெருமான் அழகாய் வீற்றிருக்கும் வெள்ளி இரதம், வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விதமாக ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தெருவிலும் மணிகூண்டைச் சுற்றியும் ஊர்வலமாகச் செல்லவிருக்கிறது.