பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 – சிலாங்கூர், காப்பாரில், ஆடவர் ஒருவர் சுடப்பட்டதில் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பில், ஐவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று மாலை மணி 4.54 வாக்கில், சுகாதார மையத்திடமிருந்து போலீசுக்கு தகவல் கிடைத்ததை, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எஸ்.விஜய ராவ் உறுதிப்படுத்தினார்.
பாதுகாவலர் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிப்புரியும் 46 வயது ஆடவரை, கருப்பு நிறக் காரில் வந்த ஐவர் மிக அருகில் இருந்து சுட்டது, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், வலது கை மற்றும் வலது தோள் பட்டையில் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ள வேளை ; அவர் உடனடியாக துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அச்சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இதுவரை ஐவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலுக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த குற்றச்செயல் கொலை முயற்சிக்கான சட்டத்தின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளது.