கோத்தா பாரு, பிப்ரவரி 29 – கிளந்தான், ரந்தாவ் பாஞ்ஞாங்கிலுள்ள, பொருள் விநியோக சேவை மையம் ஒன்றிலிருந்து, 3.007 கிலோகிராம் எடையிலான கஞ்சா பொட்டலம் ஒன்றை மாநில சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பொட்டலத்தில் இருந்த கஞ்சா போதைப் பொருளின் மதிப்பு ஏழாயிரத்து 517 ரிங்கிட் 73 சென் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட பொருள் விநியோக சேவை மையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கஞ்சா இலைகள் நிரப்பப்பட்டிருந்த அந்த பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டதாக, மாநில சுங்கத் துறை இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.
உள்ளூரில் விற்பனை செய்ய ஏதுவாக அந்த போதைப் பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனினும், அந்த பொட்டலத்தில் அனுப்புனரின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெறுனரின் பெயரும், முகவரியும் மட்டுமே இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை, 15 ஆயிரத்துக்கும் அதிகமான போதைப் பித்தர்களுக்கு விநியோகிக்க முடியும் என கூறப்படுகிறது.