
கோத்தா பாரு, ஆகஸ்ட் 10 – கோத்தா பாரு உயர் நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு பள்ளிச் சுற்றுலாவின்போது, பேருந்தின் பழுதடைந்த தரைப்பகுதி உடைந்து விழுந்ததில் 12 வயது மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அம்மாணவரின் தாயாருக்கு 17,573 ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
2019 ஜூலை 4ஆம் தேதி, தொக் பொக் (Tok Bok) தேசிய பள்ளியைச் சேர்ந்த 31 மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தபோது, சம்பந்தப்பட்ட மாணவர் பேருந்தின் பழுதடைந்த தரை வழியாக சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்து ஓட்டுநர், உரிமையாளர், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட தரப்பினர் அலட்சியமாக செயல்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்து, மாணவரின் மரணத்துக்கு அவர்கள் 100 விழுக்காடு கூட்டுப் பொறுப்பென தீர்ப்பளித்தது.
மாணவர்களுடன் பொறுப்பான ஆசிரியர்கள் அல்லது ஏற்பாட்டாளர்களின் பிரதிநிதிகள் இல்லாததும், பேருந்தின் பழுதடைந்த தரையை சரிசெய்யாததும் விபத்துக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.



