
சிரம்பான், ஆகஸ்ட்.10-நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார், ஜனநாயகச செயல் கட்சியான DAPயின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நியமனம் இன்று முதல் நடப்பு வருகிறது.
மாநில செயற்குழு ஏகமனதாக அம்முடிவை எடுத்ததாக DAP பொதுச் செயலாளர் Anthony Loke Siew Fook தெரிவித்தார். மாநில DAP துணைத் தலைவராக இருந்த அருள் குமார், கட்சியின் அரசியலமைப்பின்படியே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மிகவும் சாதகமான வளர்ச்சி என்பதோடு DAP ஒரு பல்லினக் கட்சி என்பதையும் அது காட்டுகிறது. தனிநபர்களின் தகுதிகள் மற்றும் தலைமைத்துவத் திறன்களின் அடிப்படையிலேயே அவர்களை மதிப்பிடுவதாக Anthony Loke கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், Chennah தொகுதி உட்பட இரு இடங்களை DAP இழந்ததற்குப் பொறுப்பேற்று, Anthony Loke, ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாநில DAP தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
போக்குவரத்து அமைச்சரான அவர், Chennah தொகுதியில் Barisan Nasionalலின் Siow Kong Choonனிடம் 688 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அதன் வழி அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.
இவ்வேளையில், ஐந்து முனைப் போட்டியில் 15,797 வாக்குகளைப் பெற்று அருள் குமார் தனது நீலாய் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



