
கிளாந்தான், ஜூலை 30 – கிளாந்தான் மாநிலம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெற்ற ‘ஒப் வேப்’ (Op Vape) நடவடிக்கையில், 1,447 வேப் சாதனங்கள் மற்றும் 267.4 லிட்டர் வேப் திரவம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 96,475 ரிங்கிட் ஆகும்.
கிளாந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் (Datuk Mohd Yusoff Mamat) கூறுகையில், இந்த நடவடிக்கையின் போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் அப்பெண் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுகாதார அமைச்சு (KKM) மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுடன் இணைந்து 22 வேப் விற்பனை நிலையங்கள் சோதனையிடப்பட்டதாகவும், போதைப்பொருள் கலந்த வேப் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பெற்றோர்களும் பொதுமக்களும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேப் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.



