பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 – மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் கலந்த பாலை மகனுக்கு தந்த, கணவன், மனைவிக்கு எதிராக இன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
34 வயது நபிலா ஹூடா எனும் சம்பந்தப்பட்ட பெண் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட வேளை ; அவரது கணவரான 40 வயது சோபியான் முஸ்தபா ஜைன் எனும் ஆடவன் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினான்.
அவ்விருவரும், தங்களின் ஒரு வயது நான்கு மாத மகனுக்கு, மெத்தாம்பெட்டமைன் கலந்த பாலை கொடுத்ததன் வாயிலாக, ஆபத்தை விளைவிக்க முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இம்மாதம் 19-ஆம் தேதி, மாலை மணி ஆறு வாக்கில்,பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் உள்ள, மேடான் ஜெயா அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அவ்விருவரும் தலா ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் 13-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, இம்மாதம் 19-ஆம் தேதி, பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்ட அந்த பாலகன் விநோதமாக நடந்து கொண்டதை அடுத்து, அவனுக்கு போதைப் பொருள் கலந்த பால் கொடுக்கப்பட்டதை அவனது தாயார் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.