குவாந்தான், மார்ச் 9 – சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்து, 3 மாதங்களாக ‘ஜோராக’ செயல்பட்டு வந்த விபச்சாரக் கும்பல் பஹாங், குவாந்தானில் முறியடிக்கப்பட்டுள்ளது.
குவாந்தான் சுற்று வட்டாரத்தில் 17 கேளிக்கை மையங்களில் வெள்ளிக் கிழமை இரவு ஏக நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 120 வெளிநாட்டு பெண்கள் கைதாகினர்.
அவர்கள் தாய்லாந்து, மியன்மார், லாவோஸ், வியட்நாம் மற்றும் இந்தோனீசிய நாட்டவர்கள் ஆவர்.
20 வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் விலைமாதர்களுக்கு ‘பாதுகாப்புத்’ தந்து வரும் உள்ளூர் ஆடவர்கள் 11 பேரும் அச்சோதனையில் கைதாகினர்.
மூன்று வாரங்களாக உளவுப் பார்த்து, வெள்ளிக்கிழமையன்று அந்த அதிரடி சோதனையை நடத்தியதாக மலேசியக் குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் ஜஃப்ரி எம்போக் தஹா தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறையின் சோதனையின் போது, வாடிக்கையாளர் என நம்பப்படும் ஆடவன் தப்பியோடும் முயற்சியில், இரண்டாவது மாடியில் இருந்து குதித்துக் காயமடைந்தான்.
அப்பெண்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து, கேளிக்கை மையங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வர வைத்து அக்கும்பல் செயல்பட்டு வந்திருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 250 முதல் 400 ரிங்கிட் வரையில் கட்டணம் விதிக்கப்படுகிறது; ரொக்கமாகவோ அல்லது online மூலமாகவோ பணத்தைச் செலுத்தும் வசதியும் உள்ளதாம்.
இவ்வேளை, சோதனை மேற்கொள்ளப்பட்டால், அப்பெண்களை ஒளித்து வைக்க அம்மையங்களில் ரகசிய அறையொன்று அமைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த 17 கேளிக்கை மையங்களின் உரிமையாளர்களையும் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அதிகாரத் தரப்பு, இதுவரை 40 பேரை அடையாளம் கண்டிருக்கிறது.
கைதான அனைத்துப் பெண்களும் பெராவில் உள்ள கெமாயான் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டுள்ளனர்.