
குவாந்தான், மே 25 – குவாந்தான் முவாட்சாம் ஷா (Muadzam Shah) அருகேயிருக்கும் செகாமாட்–குவாந்தான் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் தகவலின்படி, அதிகாலையில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து முவாட்சாம் ஷா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றது.
இந்த விபத்தில் புரோட்டான் சாகா, பெரோடுவா அல்சா மற்றும் பெரோடுவா ஆக்சியா ஆகிய மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு பேர் பயணித்திருந்தனர்.
புரோட்டான் சாகா காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் சிக்கியிருந்த ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
உயிரிழந்த சிறுவனின் உடல் மேல் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், காயமடைந்த 11 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



