![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-05-25-PM-9610.jpg)
சிக், ஜூன் 6 – கெடா , சிக் Kampung Chong கில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் புகுந்த 1.5 மீட்டர் நீளம் உள்ள ராஜ நாகம் ஒன்று தீயணைப்பு வீரர்களின் உதவியோடு பிடிக்கப்பட்டது. நேற்றிரவு மணி 10.15அளவில் அந்த வீட்டின் குடும்பத்தினர் இரவு உணவை உட்கொள்வதற்கு தயாரானபோது திடீரென சமையல் அறையில் பாம்பு சீறும் சத்தத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனயாக அந்த குடும்பத்தினர் சிக் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மூத்த தீயணைப்பு அதிகாரி Sam Khan தலைமையில் ஆறு தீயணைப்பு வீரர்கள் அவ்வீட்டிற்கு சென்று அந்த ராஜ நாகத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவைர் Superintendent சுல்ஹைரி ( Zulkhairi ) தெரிவித்தார்.
அந்த பாம்பு பல முறை தனது விஷத்தை கக்க முயன்றதோடு அது மிகவும் முரட்டுத்தனமாக செயல்பட்டதால் அதனை பிடிப்பதில் தொடக்கத்தில் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். இறுதியில் அந்த ராஜ நாகத்தை பிடிப்பதில் தீயணைப்பு வீரர்கள் வெற்றி பெற்றதாக சுல்ஹைரி கூறினார். தற்போதைய வறட்சிக் காலத்தில் பாம்புகள் குளிர்ச்சியாக இருக்கும் வீடுகளில் உள்ள குளியல் அறைகள், கூரைப் பகுதிகள், சமையல் அறையின் இடுக்குகள், கட்டில்கள் மற்றும் சோபா நாற்காலிகளின் அடியில் இருக்கும் மறைவிடத்தை பயன்படுத்திக் கொள்ளும் என்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தீயணைப்பு அதிகாரி சுல்ஹைரி ஆலோசனை தெரிவித்தார்.