கெடா, பிப் 14 – தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் புலமை என்றாலே சொப்பனம்தான் என்று பலரும் எண்ணம் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையை அவ்வபோது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் சாதனையால் உடைத்தெரிந்து வருகின்றனர் என்றால் மிகையாகாது.
அதற்கேற்பவே கெடாவில் அமைந்துள்ள தேசிய வகை பாரதி தமிழ்ப்பள்ளியின் தனிஷா மனோஜ் ராம், தேஜஸ்வினி கண்ணன் மற்றும் தனுஜா இந்திரா ஆகிய 6 ஆம் ஆண்டு மாணவிகள், தங்களின் சுய படைப்பாக ஆங்கிலத்தில் மர்ம கதை ஒன்றை எழுதி நாவலாக வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பொதுவாகவே இம்மாணவர்களுக்கு மர்ம கதைகள் வாசிப்பது என்றால் அளாதி பிரியமாம். இதன் தாக்கமாக இவர்கள் 8 தொகுதிகளை கொண்டு 20 பக்கங்களில் “Unsolved Mystery” எனும் நாவலை 3லிருந்து 4 மாதங்களில் எழுதியுள்ளனர்.
இவர்களின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 5ஆம் திகதி அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளியின் துணையுடன் அக்கதையை நாவலாக வெளியீட்டு உள்ளனர். பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோத்தா செதார் மாவட்ட தலைமை கல்வி அதிகாரியான Yang Berusaha துவான் ஹஜி வான் காலிம் பின் அஹ்மாட் முன்னிலையில் அப்புத்தகம் வெளியீடு கண்டுள்ளது.