![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-13-Jun-2024-11-16-AM-9731.jpg)
கோலாலம்பூர், ஜூன் 13 – கல்வி அமைச்சின் பிரதிநிதி என கூறிக்கொண்ட மோசடி பேர்வழி ஒருவன் மாங்காய் சட்னி என்ற உள்நாட்டு உணவு விநியோகிப்பு நிறுவனத்தை 22,000 ரிங்கிட் மோசடி செய்துள்ளான். கல்வி அமைச்சை சேர்ந்தவர் என கூறிக்கொண்ட அந்த ஆடவன் சுங்கை பூலோவிலுள்ள புக்கிட் ரஹ்மான் புத்ரா ( SMK Bukit Rahman Putra ) பள்ளியைச் சேர்ந்த 60 ஆசிரியர்களுக்கு இரவு விருந்துக்கான உணவுகளை வழங்கும்படி பொய்யாக ஆர்டர் செய்துள்ளாளதாக மாங்காய் சட்னி நிறுவனத்தின் தோற்றுவிப்பாளரான சி. சுஹாசினி ( C .Suhashini ) தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தாம் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதோடு இதற்காக ஒரு நாள் முழுவதும் போலீஸ் நிலையத்தில் நேரத்தை செலவு செய்தும் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டதால் தமது பணத்தை மீண்டும் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மீண்டும் மற்றவர்களோ அல்லது இதர வர்த்தக உரிமையாளர்கள் இதுபோன்ற மோசடிக்கு உள்ளாகக்கூடாது என்பதால் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்துவதாக சுஹாசினி தெரிவித்தார். அந்த ஆடவர் கல்வி அமைச்சை சேர்ந்தவர் என்று கூறியதோடு அது தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதத்தையும் ஜூன் 11ஆம் தேதி தம்மிடம் சமர்ப்பித்ததால் அந்த இரவு விருந்துக்கான விவரங்களுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுஹாசினி விவரித்தார்.
மேலும் ஆசிரியர்களுக்கு நினைவு பொருளாக வழங்குவதற்கு மதுபானம் அல்லாத 30 போத்தல்களைக் கொண்ட பழச்சாறும் விநியோகிக்கப்பட வேண்டும் என நேற்று காலையில் தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு மேலும் 30 போத்தல் பழச்சாறு வேண்டும் என மிகவும் பரபரப்பாக அந்த ஆடவர் கேட்டுக்கொண்டதால் இணையம் மூலமாக அதற்கும் தாம் பணம் செலுத்தியதாகவும் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தபோதுதான் அப்படிப்பட்ட விருந்து நிகழ்ச்சி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என அறிந்து தாம் ஏமாந்ததை உணர்ந்து போலீசில் புகார் செய்ததாக சுஹாசினி கூறினார்.