![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-14-May-2024-05-13-PM-1635.jpg)
பெய்ஜிங், மே 14 – கடந்த நான்காண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருன் சீன செய்தியாளர் ஒருவரை, அந்நாட்டு அரசாங்கம் கூடிய விரைவில் விடுதலை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு, வுஹானின் அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 பெருந் தொற்றை கட்டுப்படுத்த, சீன அரசாங்கம் மேற்கொண்ட தொடக்க கட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
40 வயது ஜாங் ஜான் எனும் அந்த பெண் செய்தியாளர், கோவிட்-19 தொடர்பான செய்திகளை சேகரிக்க, 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஷாங்காயிலிருந்து, வுஹானுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது கைப்பேசியை பயன்படுத்தி, நெரிசலாக காணப்பட்ட மருத்துமனைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட தெருக்களை அவர் பகிரங்கமாக படம் பிடித்து காட்டினார்.
அவர் வெளியிட்ட செய்திகள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களை காட்டிலும், வுஹானில் நிலவிய பயங்கர சூழலை படம் போட்டு காட்டின.
அதனால், சில மாதங்கள் கழித்து, ஜாங் ஜான் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாங் ஜானின் கைகளை கட்டி, அவருக்கு வலுக்கட்டாயமாக, குழாய் மூலமாக சீன போலீசார் உணவளிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனால், 2020-ஆம் ஆண்டு டிசம்பரில், “வன்முறையை தூண்டி, பிரச்சனையை ஏற்படுத்தியதாக” குற்றம்சாட்டி ஜாங் ஜானிக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பொய்யான குற்றச்சாட்டின் பேரில் ஜாங் ஜானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை, சாடியிருந்த அமெரிக்கா, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி இருந்தது.
அந்த தண்டனைக் காலம் கடந்த திங்கட்கிழமையோடு முடிவுக்கு வந்ததை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், அவரது விடுதலை குறித்து இன்னும் தமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என ஜாங் ஜானின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டதால், கடந்தாண்டு ஜாங் ஜான், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, சீனாவின் மனித உரிமை குழு ஒன்று கூறியிருந்தது.
அதே சமயம், ஜாங் ஜான் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என சீன உள்துறை அமைச்சு சாக்கு போக்கு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.