கோலாலம்பூர், மார்ச் 25 – லஞ்சம் வாங்கிக் கொண்டு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் பாதுகாத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC கைதுச் செய்துள்ளது.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் அவர், தலைநகரில் நடக்கும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளின் ‘பாதுகாவலராக’ செயல்பட்டு வந்திருப்பது அம்பலமானது.
இதையடுத்து, புத்ராஜெயாவில் உள்ள MACC அலுவலகத்திற்கு நேற்று வாக்குமூலம் அளிக்க வந்த போது அவர் கைதானார்.
அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 20 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தையும் MACC கைப்பற்றியுள்ளது.
சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில் அக்கைது குறித்து கருத்துரைத்த KL போலீஸ் தலைவர் அலாவுதீன் அப்துல் மஜீட், நன்னடத்தை மற்றும் நெறிமுறை என வரும் போது சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
MACC-யின் விசாரணை முடிவை பொறுத்து, அந்தப் போலீஸ்காரர் மீது தங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை எடுப்பதென்பது முடிவாகும் என அலாவுதீன் சொன்னார்.