சிரம்பான், பிப் 22 – சிரம்பான் கம்புங் பூச்சோங், ஜாலான் குல சாவாவிலுள்ள சட்டவிரோத தொழிற்றாலையில் இருந்து 200 டன் மின்னனு கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கழிவுப் பொருட்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்து தவறான அறிவிப்புகளைப் பயன்படுத்தி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது என நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார். அந்த சட்டவிரோத தொழிற்சாலை 2020 இல் சீன பிரஜைகளால் தொடங்கப்பட்டது, ஆனால் அது சிறிது காலத்திற்கு மூடப்பட்டது. 2023 இல் அது மீண்டும் தொடகியது.
அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்கள் பெரும்பாலும் மியான்மர் நாட்டவர்கள் மற்றும் தொழிற்சாலை ஒரு மாதத்திற்கு RM38,000 வாடகைக்கு எடுக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து போர்ட் கிள்ளான் வழியாக அந்த கழிவுப் பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது என்று வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். அங்கு வேலை செய்துவந்த 60 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சோதனைக் குழுவைக் கண்டு தப்பி ஓடிவிட்டனர், ஆனால் ஐந்து மியான்மர் பிரஜைகள் மற்றும் இரண்டு வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டனர். அந்த தொழிற்சாலையின் கழிவுகளை அகற்றும் செயல்முறைகள் சுங்கை லிங்கியில் உள்ள மக்களின் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக வீரப்பன் கூறினார்.