
கோலாலாம்பூர், மே-12-மனிதநேயத்துடன் தன்னலமற்ற சேவையாற்றி வரும் தாதியர்களுக்கு, அனைத்துலக தாதியர் தினத்தை முன்னிட்டு, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், தாதியர்கள் நமது சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர் என அவர் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, நெருக்கடி நிலைகள் மற்றும் அவசர காலங்களில் அவர்கள் காட்டும் பொறுமை, துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவை சமூகத்தின் உயரிய மரியாதைக்குரியது என்றார் அவர்.
மருத்துவச் சிகிச்சையைத் தாண்டி, நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கும் தூண்களாகத் தாதியர்கள் விளங்குகின்றனர்.
பல தசாப்தங்களாக மலேசியாவின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதில் தாதியர்கள் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தாதியர்களின் நலன், நல்வாழ்வு மற்றும் தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



