கோலாலம்பூர், டிச 18 – செந்தூல் மார்க்கெட்டிற்கு எதிரேயுள்ள 123 ஆண்டு காலம் வரலாற்று பெருமையைக் கொண்ட ஸ்ரீ நாக அம்மன் கோயிலை தனியார் மேம்பாட்டு நிறுவனமான YTL உடைத்ததால் அந்த ஆலயத்தின் பக்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
செந்தூல் பழைய கம்போங் ரயில்வேயில் இருந்த இந்த ஆலயத்தை உடைப்பது குறித்து YTL மேம்பாட்டு நிறுவனம் எந்தவொரு முன் அறிவிப்பு மற்றும் நோட்டிஸ்
எதுவும் வழங்காமல் உடைத்தது வரம்பு மீறிய செயலாகும் என ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினரான டத்தோ A.K ராமலிங்கம் சாடினார்.
மாற்று இடம் கொடுக்கப்பட்டால் அந்த ஆலயத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு ஏற்கனவே YTL நிறுவனத்திடம் ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது குறித்து ஆலய நிர்வாகத்திற்கும் YTL நிறுவனத்திற்குடையே பேச்சுக்களும் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுக்களில் பங்கேற்கும்படி பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனுக்கும் நாங்கள் அழைப்பு கொடுத்திருந்தோம். அவரும்கூட YTL நிறுவனத்துடன் நடைபெற்றுவரும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டதை ராமலிங்கம் சுட்டிக்காட்டினார்.
ஆகக்கடைசியாக ஆறு மாதத்திற்கு முன் நடைபெற்ற பேச்சுகளின் போது கூட சம்பந்தப்பட்ட ஆலயத்தை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்வதால் ஏற்படும் செலவுகள் குறித்து அந்த மேம்பாட்டு நிறுவனம் கேட்டிருந்தது. ஆலய நிர்வாகம் இதற்கான விவரங்களை தெரிவித்திருந்தது. அதன்பிறகு அவர்கள் எங்களிடம் எந்தவொரு தொடர்பும் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று ஆலயத்தை திடிரென உடைத்துவிட்டு பூட்டையும் பூட்டிவிட்டு செல்வது எந்த வகையில் நியாயம் என ராமலிங்கம் வினவித்தார் . ஆலயத்தின் அனைத்து சிலைகளையும் உடைக்கப்பட்டு தகவல் கேட்டு தாம் அங்கு சென்று பார்த்தபோது மூலஸ்தானத்தையும் உடைத்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரத்திற்கு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அரசாங்க தரப்பில் நியாயமான பதில் வேண்டும். அதுவரை தாம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராமலிங்கம் தெரிவித்தார்.