சென்னை, ஜனவரி 17 – இந்தியா, தமிழகத்தின், சிவகங்கை மாவட்டதிலுள்ள, ஜல்லிக்கட்டு மைதானத்தில், காளைகள் முட்டியதில், சிறுவன் ஒருவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
எனினும், மதுரை அருகே சிராவாயலில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவம் ஜல்லிக்கட்டின் போது நடந்ததல்ல எனவும், போட்டி முடிந்து காளைகளை பிடிக்க அதன் உரிமையாளர்கள் திரண்டிருந்த போது நிகழ்ந்தது எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
காளைகள் தறிகெட்டு ஓடியதால், அந்த விபரீதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்னமும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் வேளை ; மொத்தம் 186 காளைகள் அதில் பங்கேற்க பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காளைகள் முட்டி இருவர் உயிரிழந்த சம்பவம், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழச் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டின் போது, அரங்கம் முழுவதும் இரு அடுக்கு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பது, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதர இடங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுகளிலும் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, மதுரை மாவட்டத்திலுள்ள, பாலமேட்டில் நேற்று மட்டும் 60 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது, தமிழகம் முழுவதும் பாரம்பரியமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு, அண்மைய சில ஆண்டுகளாக, சூடான விவாதங்கள் மற்றும் சட்டப்போராட்டங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.