கோலாலம்பூர், மார்ச் 25 – 17 வயது மாணவனும் கணிதப் பாட ஆசிரியையும் காதல் லீலையில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
சிலாங்கூர், செப்பாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் தான் அச்சம்பவம் நிகழ்ந்து வந்துள்ளது.
அது குறித்து கடந்த டிசம்பரில் புகார் செய்யப்பட்டு, விசாரணைகள் நடைப்பெற்று வருவதாக, புக்கிட் அமான் சிறார் மற்றும் மகளிர் பாலியல் தொல்லை மீதான விசாரணைப் பிரிவின் தலைமை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் தெரிவித்தார்.
அம்மாணவன் கடந்தாண்டு நான்காம் படிவத்தில் படித்த போது, பள்ளி நூலகத்தில் வைத்து அவனைக் கட்டிப்பிடித்து, கழுத்தில் முத்தமிட்டுள்ளார் 37 வயது அந்த ஆசிரியை.
அவர் முத்தமிட்டதில் லிப்ஸ்டிக் கறை தனது கழுத்தில் பதிந்ததை மாணவன் கவனிக்கவில்லை போலும்.
வீட்டுக்குப் போனவனின் கழுத்தில் சிவப்பு அடையாளம் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போன தாய், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மகனைக் கூட்டிச் சென்ற போது தான், அந்த குட்டு அம்பலமானது.
இதையடுத்தே, 46 வயது தனித்து வாழும் தாய் போலீசில் புகார் செய்தார்.
காதல் மயக்கத்தில் ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் நிகழ்ந்த இன்ஸ்டாகிராம் உரையாடலும் விசாரணைக்காகக் screenshot எடுக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் பிரம்படியைக் கொண்டு வரக் கூடிய, சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் 14-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.