கோலாலம்பூர், பிப் 12 – கோலாலம்பூர், செராஸில் ஸ்ரீ சபா அடுக்ககத்தின் 70 ஆவது புளோக்கில் 17-ஆவது மாடியில் நிகழ்ந்த தீ விபத்தில் ஆறு வீடுகள் அழிந்தன. அந்த பி.பி.ஆர் வீடமைப்பு திட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்த காணொளிகளை அருகேயுள்ள அடுக்கங்களின் குடியிருப்பு வாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். 17ஆவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, இதர வீடுகளுக்கும் பரவியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது. எட்டு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த தீச்சம்பவம் குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.